எமது ஆயரின் தவக்காலச்செய்தி
இயேசுவில் அன்பார்ந்த இறைமக்களே!
விபூதிப் புதன் நற்செய்தியில் "மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களை செய்யாதீர்கள். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றி தம்பட்டம் அடிக்காதீர்கள். நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்" என்று இயேசு கூறுகிறார். மறைவாக தர்மம் செய்யவும், செபிக்கவும் இயேசு எங்களை அழைத்து நிற்கிறார்.
நாம் செய்யும் நற்செயல்களை மற்றவர் காணவேண்டும் என்பது எமது கலாச்சாரத்தின் ஒரு குறைபாடு, ஆலயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மனிதனாய் இருக்கும் எவரும் மற்றவர் எம்மைக் கண்டு பாராட்டி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கையே. ஆனால் சில வேலைகளில் இந்த இயற்கையான உணர்வு அளவுக்கு அதிகமாகும்போது அது நம்மை பாவ வழிக்கு இட்டுச்செல்கிறது. வெளிப் பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்று மட்டும் நாம் சிந்திக்கும்போது, நாம் இறைவனால் படைக்கப்பட்டு அவரால் அன்பு செய்யப்படுகிறவர்கள் என்பதை மறந்து போகிறோம். மற்றவர் பார்வாயில் நாம் எப்படி இருந்தாலும் நாம் தனித்துவமானவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் இறைவானாலும் மற்றவராலும் அன்பு செய்யப்படுகிறோம் என்பதும் எமது ஓர் உள்ளார்ந்த தேவையே.
ஆகவே இந்த தவக்காலத்தை எமது உள்ளார்ந்த தேவையை அறிந்துகொள்ள பயன்படுத்துவோம். மற்றவர் எம்மைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதைப்பற்றி சிந்திக்க மறப்போம். இறைவன் எம்மை அன்பு செய்கிறார் என்பதைப்பற்றிச் சிந்திப்போம். உலகத்தால் மறக்கப்பட்டவர்களை நினைவுகூறுவோம்: ஏழைகள், அழிக்கப்படும் குழந்தைகள், புலம்பெயரும் மக்கள், வியாபாரத்திற்காக கடத்தப்படும் மக்கள், அயலில் தனிமையில் இருப்போர், ஒதுக்கப்பட்ட குழந்தைகள்... எமது வெளிப்பார்வையை மாற்றாத, மற்றவரால் அவதானிக்கப்படாத மக்களை நாம் கண் நோக்குவோம்.
தவக்காலம் செபம், உபவாசம், தர்மம் செய்வதற்கான காலம். இந்த ஆண்டின் தவக்காலத்தின் அனைத்து தவ முயற்சிகளையும் உக்ரைனா நாட்டில் துன்புரும் எமது சகோதர சகோதரிகளுக்காக செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர் எமது செபங்களை வேண்டி நிற்கின்றார்.
தவக்காலம் தவ முயற்சிகளுக்கான காலம் என்றாலும், இது துயரத்திற்கான காலம் அல்ல. இக்காலம் புது ஆரம்பங்களுக்கான காலம். மார்ச் மாதம் 25ஆம் நாள் அன்னை மரியாளுக்கு மங்களவார்த்தை சொல்லப்பட்ட திருநாள். இந்த ஆண்டு இந்நாளை உயிர் வாழ்வின் தினமாக எமது மறைமாவட்டத்தில் கொண்டாடுகின்றோம். இறைவன் எமக்கு தந்துள்ள வாழ்வுக்காக இந்நாளில் இறைவனுக்கு நன்றி கூறுவோம். அத்தோடு மனித வாழ்வு மதிக்கப்பட வேண்டும் என்றும் மன்றாடுவோம்.
மற்றைய ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் உங்கள் நன்கொடைகளை காரிதாஸ் அமைப்பின் தவக்கால முயற்சிகளுக்கு வழங்குமாறு உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். மனித உயிர்களை பாதுகாப்பதற்கான அமைப்பாகிய மனித நேயம் என்னும் அமைப்பிற்கும் உதவுமாறும் உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு எமது மேற்றாசனத்தின் குடும்பங்களுக்கான ஆண்டு. எமது குடும்பங்களில் செபத்திற்கான ஒரு சிறு வேளையையாவது ஒதுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உணவுக்கு முன், மாலையில், இரவில், மற்றும் செபமாலை சொல்லுதல், நற்செய்தி வாசித்தல், அமைதியாக செபித்தல், என்று பல வழிகளில் இந்த தவக்காலத்தில் இறைவனோடு உறவாடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். செபம் எங்கள் குடும்ப உறவை பலப்படுத்தும், பாதுகாக்கும்.
உங்கள் அனைவருக்கும் இந்த தவக்காலம் ஓர் ஆசீர்வாதத்தின் காலமாக அமைய வாழ்த்துகிறேன்!
+ ஆயர்